search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் ஐஜி"

    பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு பயந்து நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பித்து சென்றதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து கர்நாடக மாநில போலீஸ் ஐ.ஜி. தயானந்தா விளக்கம் அளித்துள்ளார். #Nithyananda
    பெங்களூரு:

    தமிழகத்தை சேர்ந்தவர் நித்யானந்தா சாமியார். இவருக்கு சொந்தமான ஆசிரமம் கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், ஆசிரமத்தில் வைத்து பெண் பக்தரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2010-ம் ஆண்டு நித்யானந்தா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ராமநகர் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.



    இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக நித்யானந்தா தனது ஆசிரமத்தில் இருந்து மாயமாகி உள்ளார். அவர் வழக்கு விசாரணைக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பித்து சென்றதாக தகவல்கள் பரவி வருகிறது.

    இதுபற்றி கர்நாடக மத்திய மண்டல ஐ.ஜி. தயானந்தா கூறுகையில், ‘நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி இருக்கலாம் என நான் நினைக்கவில்லை. அவர் மீது முக்கிய வழக்கு ஒன்று கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் காலாவதியான அவரது பாஸ்போர்ட்டை புதுப்பித்து கொடுக்க போலீஸ் சூப்பிரண்டு அனுமதி மறுத்தார். இதனால் அவர் சட்டத்துக்கு உட்பட்டு வெளிநாடு சென்றிருக்க வாய்ப்பு இல்லை. அவர் வடஇந்தியாவில் இருக்கலாம். இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். #Nithyananda
     
    போலீஸ் ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு செக்ஸ் புகார் அளித்துள்ளதால் விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    தமிழக காவல் துறையில் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது உயர் ஆண் அதிகாரியான ஐ.ஜி. மீது செக்ஸ் புகார் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அந்த ஐ.ஜி. எந்தெந்த வகைகளில் எல்லாம் பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தமிழக காவல் துறைக்கு கரும் புள்ளியாக மாறியுள்ள இந்த பாலியல் துன்புறுத்தல் முயற்சி பற்றிய முழு விபரம் வருமாறு:-

    தமிழக காவல் துறை உயர் அதிகாரிகளில் சூப்பிரண்டு அந்தஸ்தில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவர் சென்னையில் முக்கிய பிரிவு ஒன்றில் துணை கமி‌ஷனராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு உயர் அதிகாரியாக ஐ.ஜி. அந்தஸ்தில் ஆண் போலீஸ் அதிகாரி இருக்கிறார். ஒரே பிரிவில் இருப்பதால் அந்த ஐ.ஜி. அடிக்கடி பெண் போலீஸ் துணை சூப்பிரண்டை அழைத்து வழக்குகள் தொடர்பாக பேசுவதுண்டு.

    நாளடைவில் அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு மீது ஐ.ஜி.க்கு ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சுமார் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அவர் தனது ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பெண் போலீஸ் சூப்பிரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம். அதோடு ஐ.ஜி.யின் விருப்பத்தை நிராகரித்துள்ளார்.

    என்றாலும் ஐ.ஜி. தனது மனதை மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் பெண் போலீஸ் சூப்பிரண்டிடம் செக்ஸ் ரீதியிலான முயற்சிகளை கையாண்டதாக தெரிகிறது. பல தடவை பாராட்டுவதாக கூறி அவர் கட்டிப்பிடிக்க முயற்சி செய்தாராம்.

    அதுபோல வழக்குகள் தொடர்பாக இருவரும் விவாதிக்கும்போது அந்த ஐ.ஜி. தனது செல்போனில் பதிவாகி உள்ள தகவல்களை காண்பித்து பேசுவாராம். அந்த தகவல்களை அவர் பெண் போலீஸ் சூப்பிரண்டின் செல்போனுக்கு பரிமாற்றம் செய்வதுண்டு. அந்த சமயத்தில் அவர் ஆட்சேபத்துக்குரிய படங்களையும் சேர்த்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக அதிகாலை நேரத்தில் அந்த அதிகாரி மோசமான படங்களை அனுப்பியதாக தெரிகிறது.

    ஒரு தடவை ஒரு வழக்கு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று பெண் சூப்பிரண்டை அவர் தனது அறைக்கு அழைத்திருந்தாராம். அப்போது அவர் தனது செல்போனில் ஆபாச படத்தை காட்டினாராம்.

    இதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி ஐ.ஜி. தொடர்ந்து ஆபாச படத்தை காட்டியதாக கூறப்படுகிறது.

    ஒரு கட்டத்தில் தனது ஆசைக்கு அடி பணியாததால் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஐ.ஜி. இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த பெண் அதிகாரியிடம், “உன்னைப் பற்றிய ஆண்டு ரகசிய அறிக்கை (ஏ.சி.ஆர்.)யில் உனக்கு எதிராக குறிப்புகளை எழுதுவேன்” என்று ஐ.ஜி. அச்சுறுத்தும் வகையில் மிரட்டினாராம்.

    இதனால் என்ன செய்வது என்று தவித்த அந்த பெண் போலீஸ் சூப்பிரண்டு வேறு பிரிவுக்கு மாற்றலாகி சென்று விடலாம் என்று முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு உடனடி இடமாற்றம் எதுவும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்திலும் அந்த ஐ.ஜி. ஒருநாள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் முயற்சியில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இனியும் பொறுமையாக இருக்க கூடாது என்று முடிவு செய்த பெண் போலீஸ் சூப்பிரண்டு சமீபத்தில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டார். அதோடு தனது பிரிவு உயர் அதிகாரியான ஐ.ஜி. மீது செக்ஸ் ரீதியிலான துன்புறுத்தல் கொடுக்க முயன்றார் என்ற புகாரையும் அளித்தார்.

    அப்போது ஐ.ஜி. எந்தெந்த வகையில் செக்ஸ் தொந்தரவு கொடுத்தார் என்றும் டி.ஜி.பி.யிடம் பெண் போலீஸ் சூப்பிரண்டு விளக்கமாக எடுத்துக் கூறினார். வழக்குகள் தொடர்பாக பேசிய போது ஆபாச படம் காட்டப்பட்டதையும் கூறினார்.

    மேலும் ஐ.ஜி. தனது செல்போனில் இருந்து அனுப்பிய ஆபாச படங்களையும் பெண் அதிகாரி ஆதாரத்துடன் காட்டி முறையிட்டார்.

    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஆதாரத்துடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களை கண்டு டி.ஜி.பி. அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டார். விசாகா கமிட்டி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க விசாகா கமிட்டி உள்ளது. தமிழக காவல் துறையில் விசாகா கமிட்டி உறுப்பினர்கள் ஓய்வு பெற்று விட்டதால், அந்த கமிட்டி செயல்படாமல் இருந்தது. தற்போது இந்த கமிட்டிக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான அந்த விசாகா கமிட்டி கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த அதிகாரி ரமேஷ் ஆகியோர் உள்ளனர். இந்த கமிட்டி ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள புகாரை முதல் வழக்காக விசாரிக்கும். விரைவில் இந்த விசாரணை தொடங்கும் என்று காவல் துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.

    அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு புதிய விதிமுறைகளை இயற்றியுள்ளது. அந்த விதிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    விசாகா கமிட்டி விதிகளின்படி, குற்றம் இருப்பதாக தெரிய வந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய முடியும். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கிரிமினல் வழக்கு பிரிவுகளின் கீழும் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து தண்டனை பெற்று கொடுக்க முடியும்.

    இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.ஜி. மீதான புகார் காவல்துறை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடமை தவறாத அந்த ஐ.ஜி. சென்னை காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். நல்ல அதிகாரி என்று பெயர் எடுத்தவர்.

    சென்னையில் துணை போலீஸ் கமி‌ஷனராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். வெளி மாவட்டங்களில் டி.ஐ.ஜி.யாகவும் பொறுப்பில் இருந்துள்ளார். இப்போது பதவி உயர்வு பெற்று ஐ.ஜி.யாக உள்ளார்.

    அவர் மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்துள்ள புகார்கள் ஆச்சரியம் அளிப்பதாக சொல்கிறார்கள். #Vishakacommittee

    ×